ஒரு துளி மை

நேற்று முதல் காணவில்லையாம்.
என் தம்பியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினார்,
அவர் தம்பியை மை போட்டு கண்டுபிடிக்க.
நீண்ட வரிசையில் காத்திருந்த பின்
அந்த முதியவரை சந்தித்தனராம்.
வெற்றிலையில் மையைத் தடவி,
சிறிது நேரம் எதையோ முணுமுணுத்து விட்டு,
என் தம்பியிடம் கேட்டிருக்கிறார்,
‘அனுமார் தெரிகிறாரா?’.
ஒன்றுமறியாமல் அவன் விழித்துக் கொண்டிருக்க,
குரலை உயர்த்தி மீண்டும் கேட்டிருக்கிறார்.
வேறு வழியின்றி அவன் தலையசைத்திருக்கிறான்.
‘ஆஹா! இதோ தெரிகிறான் காணாமல் போனவன்.’
மீண்டும் என் தம்பியிடம் காட்டி கேட்டிருக்கிறார்.
இப்போது ‘தெரிகிறான்’ என்றிருக்கிறான்.
இல்லையென்றால் அம்முதியவர் விடுவதாக இல்லை.
‘வடக்கே திரிந்து கொண்டிருக்கிறான்.
வந்து விடுவான் ஒரு வாரத்திற்குள்.’
(மூட)நம்பிக்கையை வளர்த்தன அவர் வார்த்தைகள்.
தேடல் மீண்டும் தீவிரமானது.
ஒரு வழியாக நான்காவது நாள்
அவர்களது தேடல் முடிவுக்கு வந்தது.
தம்பி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் சொன்னார்,
‘சாமி சொன்ன மாதிரியே தம்பி கிடைச்சுட்டான்’
தேடிக் கிடைத்தவனை, சாமியால் கிடைத்தான் என்றது
வேடிக்கையாக இருந்தது எனக்கு.
பல லட்சம் பேரை சிந்திக்கவும் வைக்கிறது,
சிலரை இப்படி சிந்திக்க விடாமலும் செய்கிறது,
ஒரு துளி மை.