லால்பாக் மலர் கண்காட்சி

Lalbagh Flower Showலால்பாக் மலர் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.
எவ்வளவு பெரிய தோட்டம்!
வண்டுகள் மொய்க்கும் மலர்கள், இங்கு
வாண்டுகளாலும், பெரியோர்களாலும் மொய்க்கப்பட்டிருந்தன.
ஆங்காங்கே விதைகள், பூந்தொட்டிகள்,
புத்தகங்களுக்கு என புதிய அங்காடிகள் முளைத்திருந்தன.
எங்கு நோக்கினும், கண்களின் ரசனையை
காமிராவின் லென்சுகள் குத்தகைக்கு எடுத்திருந்தன.
அப்படியே கண்ணாடி மாளிகைக்குள் புகுந்த மக்கள் வெள்ளத்தில் கலந்து,
இரண்டரை லட்சம் ரோஜாக்களாலும், பத்தாயிரம் ஆர்க்கிட் மலர்களாலுமான
ஈபிள் கோபுரத்தையும், விவேகானந்தரையும்,
அந்தூரியம் மலர்களாலான ஆடை அணிந்த அழகியையும் தரிசித்து விட்டு
மிதந்தபடியே வெளியே வந்தோம்.
களைப்பைப் போக்க அங்கேயே ஓர் ஓரமாய் அமர்ந்து,
டீக்கடை பெஞ்சில் பேசும் விஷயங்களை அலசி விட்டு,
மீண்டும் மக்கள் வெள்ளத்தில் கலந்து,
தோட்டத்திற்கு வெளியே வந்து விழுந்தோம், வீட்டிற்குத் திரும்ப.

****
இரா.சுப்ரமணி
27 01 2013

அவர்களுக்கு நன்றி

இன்று காலையில் கிரிக்கெட் ஆடி விட்டு, அப்படியே மடிவாலா சென்று சாரதியின் சமையலை மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் போது தான் ‘எனது பர்ஸைக் காணவில்லை’ என்று தெரிந்தது. நானும், கார்த்தியும் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று வழியில் அது கிடக்கின்றதா, எனத் தேடிப் பார்த்தோம். கிடைக்கவில்லை 😦 அப்புறம் கொஞ்சூண்டு நம்பிக்கையுடன் ஆபிஸில் சென்று விசாரித்த போது, யாரோ ஒருவர் அதில் இருந்த கார்டைப் பார்த்து ஆபிஸ் விலாசம் தேடி வந்து கொடுத்து விட்டுச் சென்றதாக சொன்னார்கள். அதற்கு முன்னரே, அந்த பர்ஸ் 2-3 கைகள் மாறி இருந்ததாக தகவல். எப்படியோ பர்ஸ் கிடைச்சுருச்சு. கண்டுபிடித்துக் கொடுத்த நபர் யாரென்று தெரியாமல் போனாலும், எனது பர்ஸ் மீண்டும் எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த, ‘அவர்களுக்கு நன்றி!‘.

சில ஆண்டுகளுக்கு முன், இதே மாதிரி ஒரு குட்டிக் கதையைப் பதிவு செய்திருந்தேன். அதில் ஒருவருடைய பர்ஸ் காணாமல் போகிறது. அதைக் கண்டெடுத்த முதலாமவர், அதிலிருந்து பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் அதை எடுத்த இடத்திலேயே போட்டு விடுகிறார்; இரண்டாமவர் அதை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்கும் போது, அவர்களது மனதில் தோன்றும் எண்ணங்கள் அந்தக் கதையில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பர்ஸ் காணாமல் போவதைத் தவிர, இந்த சம்பவத்திற்கும், அந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், சும்மா ஒரு மீள்பதிவு.

நல்லவன்
‘இங்க தான் சிக்னல் பக்கத்துல… ஆஸ்பத்திரிக்கு முன்னாடி… சிவப்பு கலர் டி-சர்ட், ப்ளு கலர் பேண்ட்…’
‘ஓகே! உங்களப் பார்த்துட்டேன். இதோ வர்றேன்.’
அந்த சிவப்பு நிற டி-சர்ட்காரனை அவன் நெருங்கினான்.
‘நீங்க தான ராம்?’
‘ஆமா’
இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
‘உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல, …’
‘பரவாயில்ல சார், இந்தாங்க உங்க பர்ஸ். எல்லாம் சரியா இருக்குதான்னு பாருங்க.’
‘தேவையில்ல சார். பர்ஸ் தொலைஞ்சதும் என்ன பண்றதுனே தெரியல… அதுவும் இன்னிக்கே கிடைச்சிடும்னு நினைச்சு கூட பார்க்கல… ரொம்ப நன்றி’
சில நிமிட உரையாடலுக்குப் பின் இருவரும் பிரிந்தனர்.

சிறிது தூரம் சென்ற பிறகு, அவன் வண்டியை நிறுத்தி விட்டு, தனது பர்ஸை எடுத்துப் பார்த்தான். டிரைவிங் லைசென்ஸ், கிரெடிட் கார்டு, ஐ.டி.கார்டு … எல்லாம் சரியாக இருந்தது, அவன் வைத்திருந்த 250 ரூபாயைத் தவிர.
‘ச்ச, திருட்டுப் பய, அவனப் போய் நல்லவன் அப்டி, இப்டினு பாராட்டிப் பேசிட்டு வந்திருக்கோமே. அங்கேயே, பர்ஸ பிரிச்சுப் பார்த்துட்டு, அவனயும் பிரிச்சிருக்கணும். சரி விடு, இதாவது கிடைச்சதே…’ வீட்டை நோக்கி வண்டியை விட்டான் அவன்.

‘உன்னப் போய் நல்லவன்னு சொல்லிட்டுப் போறான் பாரு… கீழ கிடந்த பர்ஸ, இன்னிக்கு துலாம்-லாபம், உள்ள இருக்க பணம் நமக்கு தான்னு நெனச்சுகிட்டே தான் எடுத்த, பர்ஸில ஒரு பைசா கூட இல்லைன்ன உடனே, அப்படியே அவனுக்கு போன் பண்ணி வரச் சொல்லிட்டு, என்னமோ நல்லவன் மாதிரி பேசிட்டு போறியே!’ அவனுக்குள்ளிருந்த கெட்டவன் அவனை ஏளனம் செய்ய, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான் ‘நல்லவன்’ ராம்.

***

இரா.சுப்ரமணி
12 10 2008

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்

panjam-padukolai-perazivu-communismஇரத்தம் சொட்ட சொட்ட அரிவாள்-சுத்தியல் இருக்கும் அட்டைப் படத்தோடு ஆரம்பிக்கிறது, ‘பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்’.

ஆதரவற்றோருக்காகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுப்பது போல் இருந்தாலும், மார்க்ஸியத்தை அதிகாரத்துக்கான ஓர் ஆயுதமாகவே மாற்றிக் கொண்டார்கள்

என்பதை, கம்யூனிச சித்தாந்தங்களால்/தலைவர்களால் சிதைக்கப்பட்ட உயிர்களின் புள்ளி விவரங்களுடன், நாம் உறைந்து நிற்கும் படி விவரிக்கின்றார், அரவிந்தன் நீலகண்டன்.

  • கம்யூனிஸம் ஓர் அறிமுகம் கம்யூனிஸ சித்தாந்தத்தின் பிறப்பும், ‘ஏன் கம்யூனிஸம் ஓர் அழிவு சக்தியாக இயங்கி வந்துள்ளது?’ என்பதைப் புரிந்து கொள்ள மார்க்ஸும், ஏங்கல்ஸும் கூறிய விஷயங்களுக்குள் இருக்கும் சில மையக்கருத்துகளும் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளன.
  • லெனின்: புரட்சி, புரட்சி, படுகொலைகள் ரஷ்யாவின் ஜார் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு, அதிகாரம் லெனின் கைகளுக்குக் கிடைக்கிறது. செகாவால் மக்கள் மீது பயன்படுத்தப்பட்ட ‘சிவப்பு பயங்கரம்’, ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கப்பட்ட க்ரோன்ஸ்டாட் புரட்சி மற்றும் ஸ்டாலினின் எழுச்சி இதில் கூறப்பட்டுள்ளது.
  • ஸ்டாலின்: பிணக்குவியல்கள் மேல் ஒரு பொன்னுலகம் ஸ்டாலினின் அரசியல் சதுரங்க விளையாட்டில் ட்ராஸ்கி மற்றும் புக்காரின் பலியாவது, பெரும் துடைத்தொழிப்புகள், குலாக் வதைமுகாம்கள், கேய்டின் படுகொலைகள் மற்றும் ஸ்டாலினின் கொலைக்கரமான பெரியா பற்றி எனப் பலவும் இந்த அத்தியாயத்தில் அடங்கும்.
  • மார்க்ஸியப் பஞ்சங்கள் ரஷ்யா, உக்ரைன், சீனா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சங்களும், அதற்கான காரணங்களும் இதில் அலசப்பட்டுள்ளன.
  • அறிவியலும் மார்க்ஸியமும் அறிவியல் அரசியல் சித்தாந்தத்துக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பது, லெனினின் மூளை குறித்த முடிவுக்கு ஏற்றவாறு செய்யப்பட்ட ஆராய்ச்சி, ஜெனிடிக்ஸ் மற்றும் சூழலியல் உதாரணங்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
  • சர்வாதிகாரிகளின் பொன்னுலகம்: மாவோ, போல்பாட், காஸ்ட்ரோ மாவோ, போல்பாட்(கெமர் ரூஜ் இயக்கம்) மற்றும் காஸ்ட்ரோ-சே குவேரா ஆகியோர் அவர்கள் பங்குக்கு புரட்சியால் ஓட விட்ட இரத்த ஆறுகளை விவரிக்கின்றது, இந்த அத்தியாயம்.
  • திபெத்தில் எரிந்த நாலந்தா சீனா திபெத்தில் செய்த இனப்படுகொலை.
  • இந்திய விடுதலைப் போராட்ட துரோகங்கள் & சுதந்திர இந்தியாவின் துரோகங்கள் அத்தியாயங்கள் கம்யூனிஸ சித்தாந்தத்தாலும், கம்யூனிஸ்டு கட்சிகளாலும் இந்தியா அடைந்த பாதிப்புகளை விளக்குகின்றது.

தேசத்தின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் மேலாகச் சித்தாந்தத்தை வைக்கும் எந்த அமைப்பும், இயக்கமும் ஒதுக்கப்பட வேண்டியதே

என்பது தான், இந்தப் புத்தகம் சொல்லும் பாடம்.

மதுரை சந்திப்பு

சில நாட்களுக்கு முன், ஸ்ரீராமும், பிரவீனும் ‘2013 பொங்கல் விடுமுறைகளின் போது இந்தியாவில் இருப்போம்’, என்று ஓர் அறிக்கை விட்டார்கள். ‘சரி பார்ப்போம்’, என்று வழக்கமான பதிலைச் சொல்லி வைத்தோம். நாள் நெருங்க நெருங்க, ‘எங்கே சந்திப்பது?’ என்று பேச்சை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே ‘பொங்கல் கொண்டாடினால், அது மதுரையில் தான்’, என நாங்க முடிவெடுத்து விட்டதால், அவர்களை ‘முடிஞ்சா மதுரைக்கு வந்து பாருங்க.’ என்று சொல்லி விட்டோம். பேச்சு வார்த்தையின் போது, என்னிடம் டிக்கெட் இல்லாத காரணத்தினால், மதுரை செல்வதற்கு டிக்கெட் எடுக்கும் பொறுப்பு ஒரு மனதாக எனக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பை நான் செம்மையாக செய்திருந்தாலும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பிரவீனின் அறிவுரை அம்புகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டேன் 😦 என் மீது யாருக்கேனும் கோபம் இருந்தால், பிரவீனுக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; அவனே உங்களை மீண்டும் அழைத்து ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் என்னைக் கழுவிக் கழுவி ஊத்துவான். நிற்க. ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் 12-01-2013 அன்று மதுரையை வந்தடைந்தார்கள். காலை 11:00 மணியளவில், செந்தில் வீட்டிலிருந்து நான், ஷனுஃப், பிரவீன் மற்றும் செந்தில், பிரபாகரன் வீட்டிற்கு சென்றோம். வழியில், எங்களுடன் நிர்மலும் சேர்ந்து கொண்டான். அடுத்த வாரம், பிரபாகரனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதால், அவனை மனமார வாழ்த்தி விட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டோம். விடை பெறும் முன், செந்திலின் மனதை பல நாட்களாக அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்ததையும், பிரபாகரன் யாருக்காகவோ வாங்கி வைத்திருந்த பலகாரங்களையும், பவண்டோவையும் நாங்கள் காலி செய்ததையும் சொல்லியே தீர வேண்டும். At Prabhakaran's House அது-இது-எது, என ஒவ்வொருவரும் ஒரு ஹோட்டல் பெயரைச் சொல்ல, கடைசியாக காக்கா தோப்பு தெருவில் இருக்கும் ஸ்ரீராம் மெஸ்ஸில் புகுந்து விளையாடினோம். சென்ற வாரம், அஞ்சப்பரில் ஐந்தே ரன்களில் அவுட்டான முசி, ஸ்ரீராம் மெஸ்ஸில் அபாரமாக ஆடி சதம் அடித்து, இழந்த ஃபார்மை மீட்டார், என்பது குறிப்பிடத்தக்கது 😉 மதிய உணவுக்குப் பின், திட்டமிட்ட படி கல்லூரிக்குச் சென்றோம். பார்த்துப் பழகிய, அழகிய மரங்கள் எங்களை வரவேற்றன. மைதானத்தில் Inter-Department கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இறுதி ஆண்டு படிக்கும் போது, நடத்திய கிரிக்கெட் போட்டி ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஓர் அணியின் பெயர் ‘முடிஞ்சா தோத்து பாரு’ என்று ஸ்ரீராம் சொன்ன போது, சிரித்துக் கொண்டே தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியை நினைத்துக் கொண்டேன். நூலகம், கணிணித் துறை, பம்ப் ஹவுஸ் என அங்கும், இங்கும் குதித்த படி, ஆல மர விழுதுகளில் தொங்கிய படி என பல க்ளிக்குகள். விளம்பரங்கள் பிடிக்காத சிலர், காமிரா முன் நிற்காமல் காத தூரம் தள்ளியே நின்றிருந்தனர் 😉 பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்திருந்தாலும், அன்று பம்ப் ஹவுஸில் அமர்ந்து கொண்டு பேசிய அதே வெட்டிப் பேச்சு. மங்காத்தாவில் அஜித் போல, கடைசியாக வந்து சேர்ந்தார் வன்னி. ஆர்த்தி ட்ரைவ் இன்-ல் ஒரு காபி சாப்பிட்டு விட்டு, என் வீட்டில் போய் ஒரு அட்டென்டன்ஸ் போட்டு விட்டு, ஜம்போ பெல்லில் இரவு உணவை முடித்துக் கொண்டோம். இப்போ கிளைமேக்ஸ் வந்தாச்சு. வேறெங்க, இரயில் நிலையம் தான்; ஸ்ரீராமையும், ஷனுஃபையும் வழியனுப்பி விட்டு, நான் வீட்டிற்கு சென்றேன். சரி இப்போ இந்தப் பதிவுல, என்ன சொல்ல வர்றனு, நீங்க கேக்குறது எனக்குப் புரியுது. ரொம்ப நாளைக்கு அப்புறம் நண்பர்களப் பார்த்தது, தேன் மிட்டாய் சாப்பிட்டதுக்கு அப்புறமும் இருக்கும் தித்திப்பைப் போல இனிப்பா இருந்துச்சு. அத அப்படியே பதிவு பண்ணிரலாம்னு தான், இந்த ‘மதுரை சந்திப்பு’ பதிவு.At College
நண்பர்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!