சில நாட்களுக்கு முன், ஸ்ரீராமும், பிரவீனும் ‘2013 பொங்கல் விடுமுறைகளின் போது இந்தியாவில் இருப்போம்’, என்று ஓர் அறிக்கை விட்டார்கள். ‘சரி பார்ப்போம்’, என்று வழக்கமான பதிலைச் சொல்லி வைத்தோம். நாள் நெருங்க நெருங்க, ‘எங்கே சந்திப்பது?’ என்று பேச்சை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே ‘பொங்கல் கொண்டாடினால், அது மதுரையில் தான்’, என நாங்க முடிவெடுத்து விட்டதால், அவர்களை ‘முடிஞ்சா மதுரைக்கு வந்து பாருங்க.’ என்று சொல்லி விட்டோம். பேச்சு வார்த்தையின் போது, என்னிடம் டிக்கெட் இல்லாத காரணத்தினால், மதுரை செல்வதற்கு டிக்கெட் எடுக்கும் பொறுப்பு ஒரு மனதாக எனக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பை நான் செம்மையாக செய்திருந்தாலும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பிரவீனின் அறிவுரை அம்புகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டேன் 😦 என் மீது யாருக்கேனும் கோபம் இருந்தால், பிரவீனுக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; அவனே உங்களை மீண்டும் அழைத்து ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் என்னைக் கழுவிக் கழுவி ஊத்துவான். நிற்க. ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் 12-01-2013 அன்று மதுரையை வந்தடைந்தார்கள். காலை 11:00 மணியளவில், செந்தில் வீட்டிலிருந்து நான், ஷனுஃப், பிரவீன் மற்றும் செந்தில், பிரபாகரன் வீட்டிற்கு சென்றோம். வழியில், எங்களுடன் நிர்மலும் சேர்ந்து கொண்டான். அடுத்த வாரம், பிரபாகரனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதால், அவனை மனமார வாழ்த்தி விட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டோம். விடை பெறும் முன், செந்திலின் மனதை பல நாட்களாக அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்ததையும், பிரபாகரன் யாருக்காகவோ வாங்கி வைத்திருந்த பலகாரங்களையும், பவண்டோவையும் நாங்கள் காலி செய்ததையும் சொல்லியே தீர வேண்டும். அது-இது-எது, என ஒவ்வொருவரும் ஒரு ஹோட்டல் பெயரைச் சொல்ல, கடைசியாக காக்கா தோப்பு தெருவில் இருக்கும் ஸ்ரீராம் மெஸ்ஸில் புகுந்து விளையாடினோம். சென்ற வாரம், அஞ்சப்பரில் ஐந்தே ரன்களில் அவுட்டான முசி, ஸ்ரீராம் மெஸ்ஸில் அபாரமாக ஆடி சதம் அடித்து, இழந்த ஃபார்மை மீட்டார், என்பது குறிப்பிடத்தக்கது 😉 மதிய உணவுக்குப் பின், திட்டமிட்ட படி கல்லூரிக்குச் சென்றோம். பார்த்துப் பழகிய, அழகிய மரங்கள் எங்களை வரவேற்றன. மைதானத்தில் Inter-Department கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இறுதி ஆண்டு படிக்கும் போது, நடத்திய கிரிக்கெட் போட்டி ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஓர் அணியின் பெயர் ‘முடிஞ்சா தோத்து பாரு’ என்று ஸ்ரீராம் சொன்ன போது, சிரித்துக் கொண்டே தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியை நினைத்துக் கொண்டேன். நூலகம், கணிணித் துறை, பம்ப் ஹவுஸ் என அங்கும், இங்கும் குதித்த படி, ஆல மர விழுதுகளில் தொங்கிய படி என பல க்ளிக்குகள். விளம்பரங்கள் பிடிக்காத சிலர், காமிரா முன் நிற்காமல் காத தூரம் தள்ளியே நின்றிருந்தனர் 😉 பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்திருந்தாலும், அன்று பம்ப் ஹவுஸில் அமர்ந்து கொண்டு பேசிய அதே வெட்டிப் பேச்சு. மங்காத்தாவில் அஜித் போல, கடைசியாக வந்து சேர்ந்தார் வன்னி. ஆர்த்தி ட்ரைவ் இன்-ல் ஒரு காபி சாப்பிட்டு விட்டு, என் வீட்டில் போய் ஒரு அட்டென்டன்ஸ் போட்டு விட்டு, ஜம்போ பெல்லில் இரவு உணவை முடித்துக் கொண்டோம். இப்போ கிளைமேக்ஸ் வந்தாச்சு. வேறெங்க, இரயில் நிலையம் தான்; ஸ்ரீராமையும், ஷனுஃபையும் வழியனுப்பி விட்டு, நான் வீட்டிற்கு சென்றேன். சரி இப்போ இந்தப் பதிவுல, என்ன சொல்ல வர்றனு, நீங்க கேக்குறது எனக்குப் புரியுது. ரொம்ப நாளைக்கு அப்புறம் நண்பர்களப் பார்த்தது, தேன் மிட்டாய் சாப்பிட்டதுக்கு அப்புறமும் இருக்கும் தித்திப்பைப் போல இனிப்பா இருந்துச்சு. அத அப்படியே பதிவு பண்ணிரலாம்னு தான், இந்த ‘மதுரை சந்திப்பு’ பதிவு.
நண்பர்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!